குன்றத்தூர்: குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வ புலவர் சேக்கிழார் பெருமானால் பாடல் பெற்ற தலமான முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகையின்போது விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு விழா சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தீயணைப்புத்துறை, மின்வாரியம், காவல்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ஆடி கிருத்திகையின்போது, குன்றத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடு செய்வது, இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வது, மலை குன்றின் மீதும், கீழ்பகுதியிலும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடம் அமைப்பது, பக்தர்கள் போக்குவரத்து நெரிசலின்றி சாமி தரிசனம் செய்வது என பல்வேறு ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கோயில் அறங்காவலர் குணசேகர், சரவணன், ஜெயக்குமார், குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, கோயில் செயல் அலுவலர் கன்னியா, நகரமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.