சென்னை: சென்னையை சேர்ந்த ராஜன் மகன் தம்பிதுரை (19). இவர், சிறு வயது முதல் காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்துள்ளார். கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று முதல்நாள் கல்லூரிக்கு தன்னுடைய டூவீலரில் ஆர்வமுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். கல்லூரியில் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தை செலுத்திவிட்டு, பிற்பகல் மாணவன் தம்பிதுரை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கீழம்பி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மினி லாரி தம்பிதுரையின் டூவீலர் மீது மோதியது. இதில், வாகனம் நிலைதடுமாறி தம்பிதுரை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகிலிருந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாணவன் தம்பிதுரை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், தம்பிதுரை உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.