புழல்: சோழவரம் ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சியில், அதிக அளவில் இருளர் இன பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஊராட்சி அல்லிமேடு இருளர் காலனி பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார். பொன்னேரி மண்டல துணை தாசில்தார் தேன்மொழி, ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இருளர் இன மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், சாதி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நல வாரிய அட்டையில் புதிதாக பெயர் சேர்த்தல், ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட 106 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சோழவரம் வருவாய் ஆய்வாளர் அன்புச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா ஆகியோர் பெற்று கொண்டனர். ஊராட்சித் துணைத் தலைவர் லட்சுமணன், ஊராட்சி செயலர் சரளா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.