
மதுரை: கடன் வசூல் தீர்ப்பாய தலைவரை நியமிப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என ஒன்றிய நிதித்துறை செயலர் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் செயல்படுகின்றன. இதன் கிளை மதுரையில் உள்ளது. 12 மாவட்ட வங்கி கடன் பிரச்னை தொடர்பான மனுக்கள் விசாரிக்கப்படுகிறது. மாவட்ட நீதிபதி நிலையில் தீர்ப்பாய தலைவர் தலைமையில் வழக்குகள் விசாரிக்கப்படும். இந்த தீர்ப்பாய தலைவர் (விசாரணை அலுவலர்) பதவி காலியாக உள்ளது. இதனால் வழக்குகளில் தீர்வு ஏற்படுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தீர்ப்பாய தலைவரை உடனடியாக நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.முரளிசங்கர் ஆகியோர், தீர்ப்பாய தலைவரை நியமிப்பதில் ஏன் இவ்வளவு காலதாமதமாகிறது என்றனர். பின்னர் மனுவிற்கு ஒன்றிய நிதித்துறை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.28க்கு தள்ளி வைத்தனர்.