மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சாலையில் சுற்றித் திரிந்த 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் சென்று விட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை பகுதியில், 5 அடி நீளம் கொண்ட அதிக விஷம் உடைய கண்ணாடி விரியன் பாம்பு அப்பகுதி ஜிஎஸ்டி சாலையில் நேற்று முன்தினம் காலை ஊர்ந்து சென்றது. பாம்பை கண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து, அந்த பாம்பு அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் உருண்டோடி விழுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்தனர். மேலும் பிடிபட்ட பாம்பினை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.