சேலம், ஏப்.20: சேலம் மாநகராட்சி கமிஷனர், மேயர் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில், காலை முதல் பொதுமக்கள் தங்களது வாக்கினை செலுத்தினர். பெண்கள் அதிக அளவில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்கினை செலுத்தினர். சேலம் மாநகராட்சி கமிஷனரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலச்சந்தர், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் சாரதா பாலமந்திர் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தார். பின்னர், அவர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி மண்டலம் 6வது வார்டுக்கு உட்பட்ட சின்னகொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதே போல், துணை மேயர், மண்டலக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள மையங்களில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.