ஐதராபாத்: ‘இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரான் உலகில் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்று முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளை ஒன்றிய அரசு ‘ஆபத்தான நாடுகள்’ பட்டியலில் வைத்துள்ளது. இப்பட்டியலில் உள்ள நாட்டிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த பட்டியலில் இல்லாத நாட்டிலிருந்து இந்தியா வந்த 2 வெளிநாட்டினருக்கு ஒமிக்ரான் தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கென்யாவிலிருந்து 24 வயது பெண்ணும், சோமாலியாவில் இருந்து 23 வயது நபரும் கடந்த 12ம் தேதி தெலங்கானாவின் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதில், ஒமிக்ரான் வகை தொற்று என நேற்று தெரியவந்தது. ஆபத்து பட்டியலில் இல்லாத நாட்டவர்கள் மூலமாகவும் இந்தியாவில் ஒமிக்ரான் நுழையத் தொடங்கி இருப்பதால் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இதே போல், அபுதாபியில் இருந்து ஐதராபாத் வழியாக மேற்கு வங்கம் சென்ற முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. * ஒமிக்ரானுக்கு எதிராக தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.* அமெரிக்காவில் 8 லட்சம் பேர் பலிஉலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ள நாடு அமெரிக்கா. அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டி உள்ளது. 5 கோடியே 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 லட்சத்து 473 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு, பலி இரண்டிலும் அமெரிக்கா உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக, முழுவீச்சில் தடுப்பூசி செலுத்த தொடங்கப்பட்ட பிறகு மட்டுமே 2 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்….