ஊத்துக்கோட்டை: வெங்கல் அருகே மின் கம்பி திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த கீழானூர், மேலானூர், கரிகலவாக்கம், வதட்டூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் வயல் வெளிகளில் மின்சார கம்பிகள் திருடுபோவதாக வெங்கல், பென்னலூர்பேட்டை, புல்லரம்பாக்கம் போன்ற காவல் நிலையங்களில் மின்வாரிய உதவி பொறியாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தனர். அதன்பேரில் மின்சார கம்பிகளை திருடுபவர்களை பிடிக்க திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. சிபாஸ் கல்யாண் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தர்மலிங்கம், சத்தியபாமா மற்றும் தனி படை குற்றப் பிரிவு போலீசார் ராவ்பகதூர், செல்வராஜ், லோகநாதன் ஆகியோர் 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரங்களில் மின்கம்பிகள் திருடப்படுவது தெரியவந்தது. இதில் ஒதிகாடு பகுதியை சேர்ந்தவர்கள்தான் மின்சார கம்பிகள் அமைக்க கான்ட்ராக்ட் எடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் ஒதிகாடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (35), பிரதீப், சூர்யா(25), சுனில், பரத் (20), முகேஷ் (24) ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள்தான் இரவு நேரங்களில் மின்கம்பிகளை திருடியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 2,600 கிலோ மின் கம்பிகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.15 லட்சம். இவர்கள் மது, கஞ்சா மற்றும் உல்லாசமாக வாழ்வதற்காக திருடியது தெரியவந்தது.