வேலூர், ஆக.17: பள்ளி மாணவர்களை அதிகளவில் ஏற்றிச்சென்ற 6 ஆட்டோக்களுக்கு ₹28 ஆயிரம் அபராதம் விதித்து மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஆட்டோக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சராசரியாக ஒரே நேரத்தில் சாலையில் 50 ஆட்டோக்களையும் பார்க்க முடிகிறது. இப்படி புற்றீசல்போல் முளைத்துள்ள ஆட்டோக்களை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து துறையும், போலீசாரும் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் குழுவினர் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பள்ளி மாணவர்களை அதிகளவில் ஏற்றிச்சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச்சென்றதால், நேற்று மொத்தம் 6 ஆட்டோக்களுக்கு ₹28ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் பர்மிட் இல்லாதது, தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாதது என்று மொத்தம் 24 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் கூறுைகயில், ‘வேலூரில் ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். அதேசமயம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும், என்றார்.