சென்னை: அதிமுக கூட்டணிக்கு 4 குழுவினர் தனித்தனியாக பேசி வருவதாக, திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, நடைபெற்ற அஷ்டதல பாத பத்ம ஆராதனை சேவையில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். பின்னர் கோயிலுக்கு வெளியே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் நிருபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறுகையில், ‘அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களவை தேர்தல் பணிகளை செய்வதற்காக அதிமுக தலைமை கழகம் சார்பில் 4 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தனித்தனியாக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர்’ என்றார்.