சென்னை: காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூரும் வகையில் சென்னையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் 2 நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி வாகன ஓட்டிகளுடன் போக்குவரத்து போலீசார் மவுன அஞ்சலி செலுத்தினர். காந்தி நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர், தேனாம்பேட்டை, ஓஎம்ஆர், அடையார், மெரினா காமராஜர்சாலை, வடபழனி 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை என மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் சிக்னல்களில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் நேற்று காலை 11 மணிக்கு அனைத்து சிக்னல்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து போக்குவரத்தை 2 நிமிடம் நிறுத்தினர். அப்போது காந்தி மற்றும் தியாகிகளை நினைவு கூரும் வகையில் 2 நிமிடம் போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு வழக்கம் போல் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.