புதுடெல்லி: ஏப்ரல் 30ம் தேதி ஒரேநாளில் 4,56,082 பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “பயணிகள் உள்நாட்டு விமான போக்குவரத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏப்ரல் 30ம் தேதி(நேற்று முன்தினம்) ஒரேநாளில் 2,978 விமானங்களில் 4,56,082 பேர் பயணம் செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு முன் தினசரி உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 3,98,579ஆக இருந்தது. தற்போது இது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நாட்டின் சிவில் விமான போக்குவரத்து நாளுக்குநாள் சாதனையை படைத்து வருகிறது. கொவிட் தொற்றுக்கு பின் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சியை குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். “கடந்த மார்ச் மாதம் வரை உள்நாட்டு விமான நிறுவனங்கள் 128.93 லட்சம் பயணிகளை ஏற்றி சென்றுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 21.4 சதவீதம் அதிகம். இதேபோல் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் 375.04 லட்சம் பயணிகளை ஏற்றி சென்றுள்ளன” என விமான போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.