ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவரும், மதுரையை சேர்ந்த குணசேகரன் (27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குணசேகரனுடன் பேசுவதை இளம்பெண் நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இளம்பெண் தனது சகோதரியுடன் இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த குணசேகரன், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் தனது பேக்கில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த இளம்பெண் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.