டேராடூன்: எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நமோ ட்ரோன் திதி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஆளில்லா விமானம் பைலட் ஆக உதவும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ட்ரோன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது உத்தரகாண்டில் உள்ள எங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கும் பயனளிக்கும் என கூறினார்.
வெறும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, இந்தியாவில் நெருப்பை மூட்டுவது பற்றி காங்கிரஸ் பேச ஆரம்பித்துள்ளனர். இப்படிப்பட்டவர்களை தண்டிப்பீர்களா? இந்த முறை அவர்களை களத்தில் இருக்க விடாதீர்கள். காங்கிரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் இந்தியாவை அராஜகம் மற்றும் ஸ்திரமின்மைக்கு தள்ள விரும்புகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் நாட்டை இரண்டாகப் பிரிப்பதாகப் பேசினார். நாட்டைப் பிரிக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? அவரைத் தண்டிக்காமல், காங்கிரஸ் தலைவர் தேர்தல் சீட்டைக் கொடுத்தது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், எங்கள் மூன்றாவது பதவிக்காலம் தொடங்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த மூன்றாவது பதவிக் காலத்தில் ஊழலுக்கு எதிராக இன்னும் பெரிய நடவடிக்கை இருக்கும். ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? என கேள்வி எழுப்பினார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி தாரைவார்த்ததால் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அருகே செல்லும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவுக்கு சொந்தமான தீவை காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு கொடுத்துவிட்டது என தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.