ஸ்ரீநகர்: காஷ்மீர் தால் ஏரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 வெளிநாட்டினர் பலியானார்கள்.காஷ்மீரில் உள்ள தால் ஏரி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. சுற்றுலாத்தலமான இங்கு படகு சவாரி செய்ய ஏராளமான பயணிகள் வருவார்கள். இந்த ஏரியில் நேற்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏரியில் நிறுத்தியிருந்த 5 படகுகள் மற்றும் அருகில் உள்ள ஏராளமான குடிசைகள் பற்றி எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பல கோடி மதிப்பிலான படகு மற்றும் சொத்துக்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் படகு குழாம் எண் 9 பகுதியில் 3 எரிந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் ஆண் என்பதும், மற்றொருவர் பெண் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பலியானவர்கள் 3 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.