திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு கங்காரு முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளனர். திண்டுக்கல் சீலப்பாடியை சேர்ந்த தம்பதி சசி (25), ரிஷா (23). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான ரிஷா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த அக்.21ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் எடை குறைவாக பிறந்தது. இதனால் குழந்தைகள் நல மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து செயற்கை சுவாசம் மற்றும் நுரையீரல் வளர்ச்சி ஆகிய சிகிச்சைகள் அளித்தனர்.
குழந்தைகளின் எடை அதிகரிக்கவும், வெப்பநிலை சீராக கிடைக்கவும், கங்காரு பராமரிப்பு சிகிச்சை முறை மூலம் குழந்தைகளை தாயின் நெஞ்சுப் பகுதியோடு அணைத்து பராமரித்தனர். இதன் மூலம் தாயின் வெப்பநிலை குழந்தைகளுக்கு சீராக கிடைத்தது. தற்போது 3 குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக உள்ளனர். குழந்தைகளின் எடையை அதிகரிக்க மருத்துவமனையில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கினர். மூன்று குழந்தைகளையும் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர்.