செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வருவதாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மறைமலைநகர் பகுதியில், மது அருந்திக்கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி, பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரித்தனர்.
அதில், அவர்கள் சதீஷ்குமார் (24), சஞ்சய் (23) என்பதும், இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் கொடுத்த தகவலின்படி அதே பகுதியில் பதுங்கியிருந்த அகில் (23), பிரவீன் (21), அப்துல் ரகுமான் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும், பைக்குகளை குறித்து வைத்து திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து 2 பைக்குள் பறிமுதல் செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.