புதுடெல்லி: ஆன்லைன் நிதி மோசடிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 39 சதவீத இந்திய குடும்பங்கள் பாதிகப்பட்டிருப்பதாக தனியார் நிறுவன ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 331 மாவட்டங்களில் ஏறக்குறைய 32,000 பேரிடம் லோக்கல்சர்க்கிள்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஆன்லைன் நிதி மோசடி குறித்த ஆய்வு நடத்தியது. இவர்களில் 66% ஆண்கள் மற்றும் 34% பெண்கள் ஆவர். இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் நிதி மோசடிகளில் ஏறக்குறைய 39 சதவீத குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 24 சதவீதத்தினர் தங்களது பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களான 23 சதவீதத்தினர் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 சதவீதத்தினர் வாங்குவது, விற்பது மற்றும் வகைப்படுத்தப்பட்ட தளங்களின் பயனர்களாக உள்ளனர். இவர்களிடம் பொருட்களுக்கான பணத்தை எடுத்து கொள்ளும் வலைதளங்கள் அதற்கான பொருட்களை டெலிவரி செய்வதில்லை. இதில் 10 சதவீதத்தினர் ஏடிஎம் கார்டு மோசடி, அடுத்த 10 சதவீதத்தினர் வங்கி கணக்கு மோசடி, தவிர 16 சதவீதத்தினர் இதர மோசடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட 39 சதவீதத்தில், 30% குடும்பத்தில் ஒருவரும் 9 % குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் நிதி மோசடியினால் பாதித்துள்ளனர். இவர்களில் 11,305 பேர் மட்டுமே அதாவது 24 சதவீதத்தினர் மட்டுமே பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். இவர்களில் 18 சதவீதத்தினர் முறைப்படி நிறுவனத்தின் மீது புகார் அளித்தும் 6 சதவீதத்தினர் உயரதிகாரிகளிடம் முறையிட்டும் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். மொத்தத்தில் 41 சதவீதத்தினர் விவகாரம் நிலுவையில் இருப்பதாகவும் 17 % எங்கு செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதாகவும் 12% புகார் எதுவும் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.