புதுடெல்லி: மூன்றாவது நாளாக நேற்றும் 16 சுற்றுகள் நடந்த போதிலும் 5ஜி ஏலம் முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி அலைக்கற்றையை விட, 10 மடங்கு வேகத்தில் செயல்படக் கூடிய 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உளளது. மொத்தம் 9 பிரிவுகளில் இதை ஏலம் விடும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நிறுவனம் கடுமையாக போட்டியிட்டன. குறிப்பாக, மிக அதிவேக செயல்பாடுகளை கொண்ட அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. அன்றயை தினம் 4 கட்டமாக ஏலம் நடந்தது.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினமும் ஏலம் தொடர்ந்தது. மொத்தம் 9 கட்ட ஏலம் முடிந்த நிலையில், ரூ.4 ஆயிரத்து 454 கோடிக்கு ஏலத்தொகை உயர்ந்தது. அதாவது, கடந்த 2 நாட்களில் மொத்தம் ரூ.1,49,454 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது.இந்நிலையில். 3ம் நாளாக நேற்றும் ஏலம் தொடர்ந்தது. 16 சுற்றுகள் நடந்த போதிலும் ஏலம் முடிவுக்கு வரவில்லை. நேற்றைய முடிவில், ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 623க்கு ஏலம் உயர்ந்தது. அதாவது, நேற்று முன்தினத்தை விட, ரூ. 169 கோடி மட்டுமே ஏலத்தொகை உயர்ந்தது. இன்றும் 4வது நாளாக 17வது சுற்றில் இருந்து ஏலம் தொடங்க உள்ளது….