புதுடெல்லி: சில பெண் வீராங்கனைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிஆர்பிஎப் டிஐஜி கஜன் சிங்கை பணி நீக்கம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான சிஆர்பிஎப்பில் 8000 பெண் வீராங்கனைகள் உள்ளனர். இந்நிலையில் சில பெண் வீராங்கனைகளை சிஆர்பிஎப் டிஐஜி மற்றும் சிஆர்பிஎப்பின் முன்னாள் விளையாட்டு அதிகாரியான கஜன் சிங் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இரண்டு வழக்குகளை டிஐஜி கஜன் சிங் எதிர்கொண்டார். இது குறித்து துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை சிஆர்பிஎப் ஏற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து யுபிஎஸ்சி மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் யுபிஎஸ்சி மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் கஜன் சிங்கிடம் விளக்கம் கேட்டு இரண்டு நோட்டீசுகள் அனுப்பப்பட்டது. நவி மும்பை பிரிவில் பணியில் இருந்த கஜன்சிங் தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்தார். தனது பெயருக்கு களங்களம் ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற புகார் எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் டிஐஜி கஜன் சிங்கை ஒன்றிய அரசு பணியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது மே31ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.