அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் பூமாலை மற்றும் வெங்கடேஷ். இந்த 2 காவலர்களும் தீபாவளியையொட்டி அந்தியூர் அண்ணாமலை பகுதியில் செயல்படும் உணவகம் ஒன்றில் வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து 2 காவலர்களும் பவானி வட்ட காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அந்த காவலர்கள் 2 பேரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டது குறித்த விசாரணை நடந்து வந்தது. இதில் அவர்கள் தீபாவளி வசூலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவலர்கள் பூமாலை மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி ஜவகர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.