ஈரோடு, மார்ச் 22: ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள், கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிப்போர் தபால் மூலமாகத் தங்களது வாக்குகளைச் செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதற்காக தகுதியானவர்களிடம் முதற்கட்டமாக ஒரு படிவம் வழங்கி, தபால் வாக்குப்பதிவுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.
அந்தப் பணி நேற்று முன்தினம் முதல் அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே ஈரோடு கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு சார்பில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று பட்டியல் பெற்று, தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை செல்போனில் தொடர்பு கொண்டு, தபால் வாக்குச்சீட்டு மூலமாக வாக்குப்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை உடனடியாக அணுகி ‘படிவம்12டி’ஐ பெற்று, ஒப்புதல் வழங்குமாறு கேட்டுகொள்ளப்பட்டது.