பாலக்காடு,மார்ச்22: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் கலால்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள – தமிழக எல்லை வாளையார் கலால்த்துறை சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையில் காவலர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வரக்கூடிய வாகனங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது பெங்களூரூவிலிருந்து தமிழகம் கோவை – வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்சில் வந்த பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள 49.39 கிராம் மெத்தாபிட்டமின் என்கிற போதைப்பொருள் இருப்பதைக் கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பயணியிடம் கலால்த்துறை காவலர்கள் விசாரணை செய்ததில் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வடக்கஞ்சேரி 2வது வில்லேஜில் வள்ளியோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் அபிநவ்(21) என தெரியவந்தது. பெங்களூருவிலிருந்து கேரளாவிற்கு மெத்தாபிட்டமின் என்கிற போதைப்பொருள் கடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக அபிநவை கலால்த்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.