சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து ரூ.1000 கோடியில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு நில ஒதுக்கீட்டு ஆணை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருவதுடன் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக தமிழ்நாடு மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டதை தொடர்ந்து நேற்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திரு. டி. ஒய். சங்க்அவர்களிடம் வழங்கப்பட்டது. இதற்காக 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள்நாட்டு பயன்பாட்டிற்காகவும் இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் நிலை 1-ல் கொள்கை அளவில் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இத்தொழிற்சாலை அமைவதன் மூலம் சுமார் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு (17,350 நேரடியாகவும் மற்றும் 2,650 மறைமுகமாகவும்) கிடைக்கும். இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளன.
இந்நிகழ்ச்சியின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், திரு. ச. கிருஷ்ணன் இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. விஷ்ணு, இ.ஆ.ப, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. ஆஷா அஜித், இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.