சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.1.6 கோடி மதிப்புடைய 2.7 கிலோ தங்கப்பசையை கடத்தி வந்த 2 இலங்கை ஆசாமிகள் உட்பட 3 பேரை சிஐஎஸ்எப் படையினர் கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்குள், சென்னை விமான நிலையத்தில் டிராவலர் புட் சர்வீஸ் என்ற தனியார் உணவு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் மணிவண்ணன் (30) சென்றார்.
இந்நிலையில் நீண்ட நேரம் கழித்து கழிவறையில் இருந்து வெளியே வந்தவரை சிஐஎஸ்எப் வீரர்கள் மடக்கினர். அவரை தனி அறைக்குஅழைத்து சென்று உடலை முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் முட்டை வடிவில் 8 பிளாஸ்டிக் பவுச்சுகள் இருந்தன. அதை திறந்துபோது, அதனுள் தங்கப் பசை இருந்தது. இதையடுத்து சிஎஸ்ஐஎப் அதிகாரிகள், மணிவண்ணனிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, இலங்கையைச் சேர்ந்த 2 டிரான்சிட் பயணிகள், துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், நேற்று அதிகாலை ஒரு மணிக்கு தங்கப்பசை அடங்கிய பார்சலை, அவர்கள் டிரான்சிட் பயணிகள் கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு, வெளியில் வந்துள்ளனர்.
அதே கழிவறைக்குள் ஒப்பந்த ஊழியர் மணிவண்ணன் சென்று, அந்தத் தங்கப்பசை பார்சலை எடுத்து, தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து வெளியில் சென்று கடத்தல் ஆசாமிகளிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, துபாயில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ரிபாஸ் (38), முகமது இன்சமாம் (35) ஆகிய இருவரை சென்னை விமான நிலைய வளாகத்தில் கைது செய்தனர். அதோடு அவர்கள் வைத்திருந்த கடத்தல் தங்கப் பசையை ஆய்வு செய்த போது 2.744 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.6 கோடி. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், பிடிபட்ட ஒப்பந்த ஊழியர் மற்றும் கடத்தல் ஆசாமிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.