ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தேவன் எஸ்டேட்டில் நேற்று மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த புலி அடுத்தடுத்து 2 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடி உள்ளது. கடந்த 19ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முதுகுழி பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரை புலி தாக்கி கொன்றது. அந்த புலிதான் மாடுகளை வேட்டையாடி இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இது குறித்து கூடலூர் ரேஞ்சர் கணேசன் கூறியதாவது: தேவன் எஸ்டேட் பகுதியில் இரு மாடுகளை புலி தாக்கி கொன்றது. இந்த புலி தாக்கிய இடத்திற்கும், முதுமலை எல்லைக்கும் சுமார் 500 மீட்டர் தூரமே உள்ளது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புலி வந்திருக்க வாய்ப்புள்ளது. கடந்த 19ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முதுகுழி பகுதியில் புலி தாக்கி முதியவர் உயிரிழந்தார். அந்த இடத்திற்கும், மாடுகளை புலி தாக்கிய இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. எனினும், மாடுகளை தாக்கி கொன்ற பகுதிகளில் 7 கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள மக்கள் தனியாக வனங்களுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மாடு ஒன்றை புலி வேட்டையாடி இழுத்தும் செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….