விளாத்திகுளம்,பிப்.2: விளாத்திகுளம் அருகே 2 நாட்களுக்கு முன்னர் மாயமான கூலி தொழிலாளி, நண்பர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த நாகலாபுரம் அருகே உள்ள ரெட்டியப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல் (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. சக்திவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நாகலாபுரம் தெற்குத் தெருவை சேர்ந்த சண்முகவேல் (66) என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சக்திவேல் திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர், சக்திவேலை உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை சக்திவேலின் நண்பரான சண்முகவேல் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் மற்றும் சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது சண்முகவேல் வீட்டினுள் சக்திவேல் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சண்முகவேலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான தொழிலாளி, நண்பர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.