காரியாபட்டி, பிப். 2: காரியாபட்டியில் சாலை வளைவை மறைத்து கார்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்தவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி நகர் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலையாக உள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை நகரங்களிலிருந்து காரியாபட்டி நகருக்குள் வரும் வாகனங்கள் செவல்பட்டி விலக்கு ரோட்டில் திரும்பி வர வேண்டும்.
இந்த நிலையில் செவல்பட்டி விலக்கு ரோட்டில் வளைவு பகுதியில் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் வளைவில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் மறைத்துவிடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலும் சாலை வளைவில் வாகனங்கள் நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை போர்டு மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.