கரூர், ஏப். 10: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் தங்கவேல் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கையெழுத்து இயக்கம், செல்பி பாய்ண்ட் மூலமாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் கோலங்கள் வரைந்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் தங்கவேல் கரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், தேர்தல் நாள் ஏப்ரல் 19ம் தேதி அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை நேற்று வெளியிட்டார். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையதுகாதர் மற்றும் தாசில்தார் (தேர்தல்) முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.