திருமலை: வரும் 15 முதல் 23ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா தலைமையில் டயல் யுவர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது செயல் அதிகாரி தர்மா பேசியதாவது, “வருடாந்திர பிரமோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்ட நிலையில் அக்டோபர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் 14ம் தேதி அங்குரார்பண பூஜை நடைபெறும். 19ம் தேதி கருடசேவை, 20ம் தேதி புஷ்பகவிமானம், 22ம் தேதி தங்கரதம், 23ம் தேதி சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறும். தினந்தோறும் காலை 8 முதல் 10 மணி வரையும், இரவு 7 முதல் 9 மணி வரை வாகனசேவை நடைபெறும். இதில் கொடியேற்றமும், கொடி இறக்கமும் இருக்காது. சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சந்திர கிரகணம்: அக்டோபர் 29ம் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2.22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடையும். எனவே சந்திர கிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயில் 28ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி நேரம் மூடப்படும். 28 அன்று சகஸ்ர தீப அலங்காரசேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வருகை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.