ஒசூர்: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 15 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் இன்று தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கர்நாடக மாநில காவிரி வனவிலங்கு சரணாலயத்திலிருந்து கடந்த அக்டோபர் மாதம் 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறி தமிழக எல்லை பகுதியான ஜவளகிரி வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து ஓசூர் வனகோட்டத்திற்கு உட்பட்ட சானமாவு, தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளன. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்த 13 யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடேதூர்கம் வனப்பகுதிக்கு சென்று தஞ்சம் அடைந்து இரவு நேரங்களில் அருகில் உள்ள விளைநிலங்களில் சேதப்படுத்தி வந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி அனுமந்தபுரம், சினிகிரிப்பள்ளி, பென்னிகல் வழியாக ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு வந்து தற்போது தஞ்சம் அடைந்துள்ளன.
ஏற்கனவே ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 2 யானைகள் இருந்த நிலையில், தற்போது மேலும் 13 காட்டு யானைகள் வந்துள்ளதால் மொத்தம் 15 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர். இன்று மதியம் அல்லது மாலை தேன்கனிக்கோட்டை அடர்ந்த வனப் பகுதிக்குள் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.