சென்னை: அரசு டாக்டர்களுக்கான 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தர்ணா போராட்டம் நடந்தது. கொரோனா சமயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்த போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்று பரவல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் உறுதியான நடவடிக்கை மூலம், 36 ஆயிரமாக உச்சத்தில் இருந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தார். தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் தொற்றையும் முதல்வரின் வழிகாட்டுதலில், அரசு மருத்துவர்கள் உறுதியாக களத்தில் நின்று சமாளிப்போம். அரசுக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருப்போம். கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், ஏராளமான மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்ட போதும், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறோம்.தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. முந்தைய ஆட்சியில் நியாயமான ஊதியக் கோரிக்கைக்காக போராடிய 118 மருத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டோம். இந்த கொரோனா சமயத்தில் மருத்துவர்களின் உணர்வுகளை முதல்வர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம். அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. அதுவும் இதில் பெரும் பகுதியை மருத்துவர்கள் இன்சூரன்ஸ் மூலமாகவே அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தர முடியும். மேலும் அரசு ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள், கொரோனா தடுப்பூசி போன்றவற்றின் இருப்பை உறுதி செய்யும் வகையில் தீர்வை ஏற்படுத்தி வருவதோடு, கொரோனாவுக்கே முற்றுப்புள்ளி வைக்க உள்ளது. அதுபோல அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றி, ஊதியப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட முதல்வரை வேண்டுகிறோம். இவ்வாறு பெருமாள் பிள்ளை கூறினார்….