பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக.நகர் தெற்கு பகுதி 76வது வட்ட திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா’’ என்ற தலைப்பில் 300 சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 76 வது வட்ட திமுக செயலாளர் எஸ்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.
இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தாயகம் கவி எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘’உடுத்த உடை, உடையை தூய்மையாக பயன்படுத்த இங்கு வந்துள்ள சலவைத் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இங்குள்ளவர்கள் பெரும்பான்மையானோர் கட்சிக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள். நீங்கள் வாழ்த்தினால் தலைவர் அவர்கள் நூறாண்டு வாழ்வார்கள்’ என்றார். அமைச்சர் காந்தி பேசியதாவது; இந்த விழாவில் கலந்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி.
சிறப்பான முறையில் நலத்திட்ட உதவிகளை செய்பவர் அமைச்சர் சேகர்பாபு. 3 நாட்களுக்கு முன் சோளிங்கர் கோயில்களில் காலை 6 மணிக்கு ஆய்வு மேற்கொள்ளலாம் என்றார். காலை 5.30 மணிக்கு என்னை வரவேற்க எனக்கு முன்னால் சென்றுவிட்டார். இவையெல்லாம் ஈடுபாடு இருந்தால் தான் முடியும். ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் முதல்வர் சொன்னது இது திமுக ஆட்சியல்ல, மக்கள் ஆட்சி. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்குமான அரசு என்றார். அதற்கு ஏற்றார் போல் அமைச்சர் சேகர்பாபு பணி செய்கிறார். பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை செய்கிறார். கல்லூரி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். மக்கள் கோரிக்கை வைக்காமலே மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்துபவர் கலைஞர். ஆனால் கலைஞரை மிஞ்சும் அளவிற்கு மக்கள் பணியாற்றுகிறார் நம் முதல்வர் ஸ்டாலின். யார் யாரோ அரசியலுக்கு வந்துவிட்டு வாய்க்கு வந்தவற்றை எல்லாம் பேசுகிறார்கள். நீங்கள் சிந்திக்க வேண்டும். மத்திய அரசில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது என்ன? திமுக ஆட்சியில் 33 மாதங்களில் நடந்துள்ள பணிகள் குறித்து சிந்தித்து தலைவர் அவர்கள் கை காட்டுபவருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு காந்தி பேசினார்.