Saturday, June 1, 2024
Home » 107 வயது நிறைவடைந்த ஓய்வூதியரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

107 வயது நிறைவடைந்த ஓய்வூதியரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

by Kalaivani Saravanan

சென்னை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 107 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் கோபாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். கு.கோபாலகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மூலமாக 1972 மே 1ம் தேதி முதல் குடிமை ஓய்வூதியம் பெற்று வருகிறார். அவரது ஓய்வூதிய கொடுவை ஆணை எண். A-69690. ஓய்வூதியர் பிறந்த தேதி 26.10.1916. தனியர் தற்போது 107 வயதை நிறைவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களில் கோபாலகிருஷ்ணன் அவர்களே வயதில் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரு வாரிசுகள் உள்ளனர்.

இவர் இரண்டாம் உலகப் போர் (1939 – 1945) நடைபெற்ற காலத்தில் இராணுவத்தில் I.E.M.E படை பிரிவில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக் மற்றும் கனரக வாகன ஓட்டுநராக Lans Nayak பதவி நிலையில் ஐந்து வருடங்கள் பணிப்புரிந்துள்ளார். அப்போது பர்மா, மணிப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போரில் பங்கெடுத்துள்ளார். அன்றைய காலக்கட்டத்தில் ஐந்து பதக்கங்களையும் பெற்றுள்ளார். அதன் பிறகு ஒன்றிய அரசுப்பணியில் சில காலம் சுங்கத்துறையில் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து நாகப்பட்டினம், காவல் நிலையம் – திட்டச்சேரியில் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

அவர்களை கௌரவிக்கும் விதமாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் கருவூல கணக்குத்துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியனும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) திரு.ரஞ்சித் சிங் ஆகியோரும், ஓய்வூதியர் வசித்து வரும் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர்காணலை மேற்கொண்டதுடன் நேர்காணல் சான்றிதழை அளித்து கௌரவித்தார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களை கௌரவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கௌரவிக்க கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு.நாகை மாலி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், நகர மன்ற துணைத்தலைவர் திரு.செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கருவூல கணக்குத்துறையின் திருச்சி மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்கு ஆணையரின் நேர்முக உதவியாளர் (கருவூலக் கட்டுப்பாடு), மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

You may also like

Leave a Comment

six + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi