வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள்(104). இவரது கணவர் சின்னகண்ணு. இவர்களுக்கு 2 மகன், 2 மகள், பேரக்குழந்தைகள், கொள்ளுபேரக்குழந்தைகள் உள்பட 43 பேர் உள்ளனர். சின்னகண்ணு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வயது மூப்பு காரணமாக இறந்தார். இதனால் வள்ளியம்மாள் மகன்கள் வீட்டில் வாழ்ந்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் வள்ளியம்மாளின் தம்பி துரைசாமி(102). இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள். இவருக்கு 57 பேரக்குழந்தைகள் உள்ளனர். துரைசாமி தனது மனைவி கண்ணம்மாளுடன்(89), மகன் அண்ணாமலை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வள்ளியம்மாள் வயது மூப்பு காரணமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி துரைசாமி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அக்கா இறந்த சோகத்தில் இருந்த தம்பி துரைசாமி நேற்றுமுன்தினமே திடீரென இறந்தார். ஒரே நாளில் அக்கா, தம்பி இறந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து நேற்று இருவரின் சடலங்கள் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது. அக்கா இறந்த துக்கத்தில் தம்பியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.