ஈரோடு: ஈரோட்டில் நிருபர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று கூறியதாவது: தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கொத்தடிமையாக, கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்யும்போது பல தவறுகள் செய்துள்ளார். அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாதுனு எதிர்க்கட்சிகள் கூறி உள்ளனர். அதனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து அண்ணாமலை வேட்புமனுவை ஏற்றுக்கொள்கிறேன் என தேர்தல் அலுவலர் அறிவித்து விட்டார். இது தேர்தல் கமிஷன் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. தமிழகத்தில்பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு உடனே அவர்கள் கேட்ட சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனே தருகிறது.
ஆனால், விடுதலை சிறுத்தைகள், மதிமுகவிற்கு போன்ற கட்சிகளுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. பிரதமர் மோடி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கூடுதலாக சம்பளம் தரப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு அறிவிக்கிறோம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். வேட்பு மனு வாங்க ஆரம்பிக்கப்பட்ட பிறகு, 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் சம்பளம் தரப்படும் என அறிவித்தது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். தேர்தல் விதிமுறைகள் தெரியாதவர் ஒருவர் பிரதமராக இருப்பது நமது துரதிஷ்டம். ஆகவே, தேர்தல் விதிமுறைகளை மீறிய மோடி பிரதமராக இருந்தாலும் சரி, அவர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.