விருதுநகர், ஏப். 13: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024யை முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என்ற தலைப்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
கலெக்டர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. 18வயது நிரம்பிய முதல், இளம்தலைமுறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், திருநங்கையர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் வட்டார போக்குவரத்து அலுவலர், ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சி அளிப்பவர்கள், புதிய வாகன விற்பனை முகவர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
250க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வானகத்தில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கி புதிய பஸ்நிலையம், நகராட்சி அலுவலகம், மீனாம்பிகை பங்களா, பழைய பஸ் நிலையம் வரை சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்த, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பாதகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தார். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், இளங்கோ, கதிர்வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.