பெங்களூரு: ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஏன் 2 மாதங்களுக்கு நிறுத்திவைக்கக்கூடாது என்று கர்நாடக பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக்கோரி சிறுபான்மை பிரிவு தொடர்ந்த வழக்கு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என வாதிட்டார். சீருடை குறித்து முடிவு செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது என்று அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மாணவிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதை தொலைக்காட்சிகளில் தினமும் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் இறுதி தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இந்த 2 மாதங்கள் மட்டும் ஏன் இந்த புதிய சட்டத்தை நிறுத்தி வைக்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து புராணை மேற்கோள் காட்டி வாதங்கள் நடைபெற்ற நிலையில், விசாரணையை நீதிபதிகள் அமர்வு 3 மணிக்கு ஒத்திவைத்தது….