ஈரோடு ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்துள்ள மண்கரடு, சர்ச் வீதியைச் சேர்ந்தவர் செல்வன் (38). இவரது மனைவி கவிதா (33). இவர்களது மகள் செளபர்ணிகா (13). கல்யாணிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கவிதா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மகள் செளபர்ணிகாவும் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இதனால், தாய் கவிதாவும், மகள் செளபர்ணிகாவும் தினமும் ஸ்கூட்டரில் ஒன்றாக பள்ளிக்குச் செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் காலை இருவரும் வழக்கம்போல ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர். எழுமாத்தூர்-சோளங்காபாளையம் அடுத்துள்ள வெப்பிலி பிரிவு அருகே சென்றபோது, திடீரென ஸ்கூட்டரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி செளபர்ணிகா உயிரிழந்தார். இது குறித்து, மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்கூட்டர் டயர் வெடித்து விபத்து: சிறுமி பலி
previous post