வேலூர், மார்ச் 2: வினாத்தாள் வரும் நேரத்தில் விடுமுறை எடுத்து, பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று காலை தொடங்கியது. இதனையொட்டி ஏற்கனவே அனைத்து கல்வி அலுவலர்களும் தேர்வு நேரத்தில் விடுமுறை எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டங்கள் தோறும் வினாத்தாள்கள் அந்தந்த கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் வேலூர் மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களுக்கு தனித்தனியாக 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். வினாத்தாள்கள் வரும் நேரத்தில் அதனை வாங்கி ைவக்க வேண்டிய அதிகாரியாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேர்வுதாள் வரும் நாளில், மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா விடுமுறை எடுத்துள்ளார். இதனால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் விடுமுறை எடுத்து தேர்வு பணியை சரிவர செய்யாமல் பணியில் மெத்தனம் காட்டிய காரணத்திற்காக கல்வித்துறை மூலம், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா சஸ்பெண்ட் செய்து, கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.