குடியாத்தம், மார்ச் 2: குடியாத்தம் அருகே பெண் வார்டு கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.வலசை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி பார்வதி(37). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பார்வதி கல்லப்பாடி ஊராட்சி 6வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லையாம். இதனால் பார்வதி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வார்டு கவுன்சிலர் பார்வதி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பார்வதி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், குடியாத்தம் பிடிஓக்கள் கல்பனா, பெருமாள் ஆகியோரும் விசாரித்து வருகின்றனர். வார்டு கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.