வேதாரண்யம்,ஜூன் 14: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி ஊராட்சியில் அமைந்துள்ளது மூக்காச்சித் தெரு அரசு உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு, சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு உட்பட ஐம்பெரும் விழா தலைமையாசிரியர் சுந்தரேஷன் தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி, ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற விடுதி காப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர் அருள்செல்வன், தமிழாசிரியர் கலைமகள் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு அளிக்கப்பட்டது. மேலும் மாநில, மாவட்ட அளவில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற சுஜிதா (484), மீனாப்பிரியா (468), தீபிகா (467), காவியா (465), ஜெயராம் (451) ஆகியோர் பாராட்ட பெற்றனர். பின்னர் பள்ளியில் மாணவர்களின் வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கனகராஜ், சமூக ஆர்வலர் சுந்தரபாண்டியன், ஆசிரியர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.