சேலம், மே 5: சேலத்தில் வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, குரும்பப்பட்டி, பனமரத்துப்பட்டி, மேச்சேரி, மேட்டூர் உள்பட பல இடங்களில் வெள்ளரிக்காய் சாகுபடியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை வெள்ளரிக்காய் விளைச்சல் அதிகரிக்கும். வெள்ளரியை காயில் பறிக்காமல் பழுக்க விட்டால், வெள்ளரி பழம் கிடைக்கும். சேலம் அடுத்த கன்னங்குறிச்சியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வெள்ளரி பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை செய்யப்படும் வெள்ளரிபழத்தை, சேலம் மார்க்கெட், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.
ஒரு பழம் அளவை பொறுத்து ₹30 முதல் ₹100 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது கோடை வெயில் காரணமாக, வெள்ளரி பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஜூஸ் போட பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். இதனால், வெள்ளரி பழத்தின் விற்பனை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.