திண்டுக்கல், ஆக. 27: திண்டுக்கல்லில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2023-24ம் நிதியாண்டிற்கான முன்னுரிமை கடன் வழங்க வருடாந்திர இலக்காக ரூ.15,256 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முன்னுரிமைக் கடன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத இலக்காக ரூ.500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இருப்பினும் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் தரப்பில் ரூ.601.33 கோடி அளவிற்கு பயனாளிகளுக்கு கடன் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு ரூ.306.99 கோடியும், பயிர்க்கடனாக ரூ.56.45 கோடியும், சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.297.89 கோடியும் கடந்த இரண்டு மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்கடன், செக்கு எண்ணெய் தொழில் கடன், பந்தல் அமைப்பு தொழில் கடன் என மொத்தம் ரூ.2.11 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.