புதுக்கோட்டை, மார்ச் 8: புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதிற்கு அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அழியாநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதிற்கு அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியாளூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முந்தினம் 6ம்தேதி (புதன்கிழமை) திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி,தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கப்பரிசு, பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பேராசிரியர் அன்பழகன் விருது பெற்ற அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பா.சுகந்தி, கந்தர்வக்கோட்டை அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனிவேல், அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் வ.சிராஜூனிசா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா அவர்களை சந்தித்து ஊக்கப்பரிசு, பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.