விகேபுரம், ஜூன் 28: விகேபுரத்தில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர். கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கோமதி பார்வதிநாயகம்(29). இவர் பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23ம் தேதி அன்று கோமதி பார்வதி நாயகம் பணம் செலுத்த வி.கே.புரம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மேஜையில் செல்போனை வைத்துவிட்டு பணத்தை செலுத்தி பிறகு திரும்பி வந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் எஸ்ஐ தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வி.கே.புரம், கீழ ரதவீதியைச் சேர்ந்த ராஜ சுப்பிரமணியன் (42) என்பவர் செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தார்.