வேலூர், மார்ச் 26: வேலூர் மீன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மீன் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் வேலூர் கஸ்பாவை சேர்ந்த ஜெகன்நாதன்(23) என்பவர் மீன் வாங்க வந்துள்ளார். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வன்னிவேடு மோட்டூரை சேர்ந்த ராஜா(36) என்பவரும் மீன் வாங்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் இருவரும் ஒருவரையொருவர் ஆபாசமாக பேசியபடி தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த தகராறு கோஷ்டி மோதலாக மாறியது.
இதில் ஜெகன்நாதனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் பிரகாஷ்(25), கஸ்பாவை சேர்ந்த பாலாஜி(29), தினேஷ்குமார்(25), எபினேஷ்(31), ரகு(21) ஆகியோரும், ராஜாவுக்கு ஆதரவாக வாலாஜா வன்னிவேடு மோட்டூரை சேர்ந்த கமல்(24), தியாகு(23), ஜோதிவாசன்(22), நாகராஜ்(24) ஆகியோரும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் ஜெகன்நாதனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் நிலை தடுமாறி அவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்த வியாபாரிகள் திரண்டு இருதரப்பையும் விலக்கி விட்டதுடன், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து காயமடைந்த ஜெகன்நாதன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக இருதரப்பும் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் இருதரப்பை சேர்ந்த 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.