வாணியம்பாடி: வாணியம்பாடியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கிருமி நாசினி தௌிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் நகராட்சியினர் மெத்தனம் காட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையத்தில் தினமும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேலும், குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சியினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கடந்த 3 நாட்களாக இந்த பணிகளை நகராட்சியினர் மேற்கொள்ளவில்ைல என நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சிகிச்சை மையத்தில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாம். எனவே சிகிச்சை மையத்தில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தவும், சிகிச்சை மையத்தில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உறவினர்கள் உணவு வழங்கும் அவலம்வாணியம்பாடி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு வழங்கி வந்தாலும், சில நோயாளிகளுக்கு அவர்களது உறவினர்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து வழங்கி வருகின்றனர். அவ்வாறு உணவை வழங்கினாலும், கல்லூரியின் நுழைவு வாயிலில் கொடுத்து விட்டு செல்லாமல் கொரோனாவின் தாக்கம் குறித்து சிறிதும் அறியாமல் நோயாளிகள் சிகிச்சை பெறும் இடத்திற்கு நேரடியாக வந்து அவர்களை சந்தித்து உணவு வழங்கி வருகின்றனர். இதனை அங்கு அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …