Thursday, May 16, 2024
Home » ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையில் தடுப்பு சுவர் கட்ட தோண்டிய பள்ளத்தால் வீடுகள் இடியும் அபாயம்

ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையில் தடுப்பு சுவர் கட்ட தோண்டிய பள்ளத்தால் வீடுகள் இடியும் அபாயம்

by kannappan

ஏரல்:  ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையில் தடுப்பு சுவர் மற்றும் தார் சாலை அமைக்கும் பணி 2 மாதமாக நடைபெறாததால் தடுப்பு சுவருக்காக தோண்டப்பட்டுள்ள குழியினால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையில் உள்ள நம்மாழ்வார் தொடக்கப்பள்ளி அருகே இருந்து வடிகால் மடை செல்லும் தார் ரோடு குண்டும், குழியுமாக இருந்து வந்தது.  இந்த சாலையை புதியதாக அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையடுத்து நகர்புற வளர்ச்சி திட்டத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இந்த சாலையில் மோசமான இடத்தில் தடுப்பு சுவர் அமைத்து சாலை புதிதாக போடுவதற்கான பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பள்ளி அருகில் உள்ள குடியிருப்பு வீட்டு முன்பு சாலையோரத்தில் தடுப்பு சுவர் முதலில் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டைவிட்டு தடுப்பு சுவர் வழியாக ஏறுவதற்கு படிக்கல் கட்டுவதற்கு கம்பி கட்டி கான்கீரிட் போடுவதற்கு பலகை வைக்கப்பட்டது. ஆனாலும் இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் படிக்கட்டு கட்டி கொடுக்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்து ரோட்டிற்கு வருவதற்கு இந்த மக்கள் தடுப்பு சுவரில் ஏறி குதித்து வருகிறார்கள். வயதானவர்கள் மிகவும் சிரமப்பட்டு ஏறி சென்று வருகிறார்கள்.  இதேபோல் இதன் அருகில் ஊர் அம்மன் கோயில் பின்புறம் சாலையோரத்தில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக 25 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் பணி நடைபெறாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதன் அருகில் வீடுகள் இருப்பதால் எந்த வித பாதுகாப்பும் இன்றி இந்த மக்கள் இந்த படுகுழியோரம் உள்ள சாலை வழியாக நடந்து நடந்து சென்று வருகின்றனர். மேலும் சாலையோரம் மண் இடிந்து பள்ளத்தில் விழுந்து சாலை சுருங்கிக் கொண்டே வருகிறது. இதனால் இப்பகுதியில் வீடுகளில் வசிப்பவர்கள் பயந்து கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டு அருகே இந்த தோண்டப்பட்ட படுகுழியில் உடனடியாக தடுப்பு சுவர் அமைத்து சாலை போடும் பணியை விரைவாக தொடங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில்: ஏரல் பேரூராட்சி 8வது வார்டு திருவழுதிநாடார்விளையில் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெறாததால் வீட்டு அருகில் தடுப்பு சுவர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் ஆடு, மாடு விழுந்து உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இவ்வழியாக சென்ற ஒரு பெண் விழுந்து கை ஓடிந்து போய் உள்ளது. மேலும் சாலையில் மண் சரிந்து விழுந்தும், இன்னும் சரியும் நிலையில் சாலை பிளவுப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளும் இடியும் அபாயம் நிலவுகிறது. இந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்வதற்கு பயப்படுகிறார்கள். பெரியவகை விபத்து ஏதும் ஏற்படுவதற்குள் இந்த சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் உடன் கட்டியும், சாலை போடும் பணியையும் விரைவாக உடன் தொடங்கி முடித்திட வேண்டும்’ என்றார்….

You may also like

Leave a Comment

3 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi