சமயபுரம், டிச.20: மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிபெயர்ச்சி விழா நடைபெறும். அதன்படி கடைசியாக கடந்த 27.12.2020 அன்று சனிபெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கிய பஞ்சாங்கம்படி வரும் சோபகிருது வருடம் மார்கழி மாதம் டிசம்பர் 20ம் தேதியான இன்று மாலை 5.30 மணியளவில் சனிபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனீஸ்வர பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர உள்ளார்.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.